காவிரி, குண்டாறு, வைகை இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநாடு திருப்புவனம் ஒன்றியம் மடப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இம் மாநாட்டில் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் அய்யம்பாண்டி வரவேற்றார்.
மாநிலச் செயலாளர் விஜயமுருகன், தீண்டாமை ஒழிப்பு முன்னனி மாநிலச் செயலாளர் கந்தசாமி, விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.கே.மாணிக்கம், மாவட்டச் செயலாளர் வீரபாண்டி,விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் தண்டியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக விவசாயிகள் பங்கேற்ற பேரணி நடந்தது.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் காவிரி, குண்டாறு, வைகை நதிகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
மாவட்டத்தில் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டு பிரச்னையை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்தில் விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்,பால் கொள்முதலில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் விவசாயிகள் சங்கத்துக்கு புதிய மாவட்ட தலைவர்-ஏ.ஜெயராமன், செயலாளர் ஏ.ஆறுமுகம்,பொருளாளர்-கே.வீரபாண்டி, துணைத் தலைவர்கள்-அண்ணாதுரை, ஜோதிநாதன், துணைச் செயலாளர்கள்- மோகன், சந்தியாகு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.