தேவகோட்டையில் வாரச் சந்தை மற்றும் சாலையோரக் கடைகளில் தராசு மற்றும் எடைக் கற்களில் முறைகேடுகளைத் தடுக்க, தொழிலாளர் நல ஆய்வாளர் ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வாரச் சந்தையில் காய்கறி வியாபாரிகள் எடை கற்களில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக, தொழிலாளர் நல ஆய்வாளர் மைதிலி செல்விக்கு தொடர் புகார்கள் வந்துள்ளன.
அதனடிப்படையில், அவர் ஞாயிற்றுக்கிழமை தேவகோட்டை வாரச் சந்தை மற்றும் நடைபாதைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, காய்கறி நிறுவையில் எடைக் கற்கள் மற்றும் தராசுகளில் பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்து, சுமார் 200-க்கும் மேற்பட்ட தராசுகள் மற்றும் 300-க்கும் மேற்ற எடைக் கற்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.