சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஒருங்கிணைந்த நகர் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மாநில அமைப்புச் செயலர் கே.முகமது ஹவுஸ் தலைமை வகித்தார்.
மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் கமருல்ஜமான் முன்னிலை வகித்தார். பொதுக் குழுவில், ஒருங்கிணைந்த நகர் தலைவராக சமஸ்கானும், நகர் செயலராக ராஜாமுகமதுவும், பொருளாளராக ரகமத்துல்லாவும், துணைத் தலைவராக அமானுல்லாவும் தேர்வு செய்யப்பட்டனர்.
மனித நேய மக்கள் கட்சி நகரச் செயலராக சையது அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், திருப்பத்தூர் பேரூராட்சியில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களை செயல்படுத்த வேண்டும், அரசு மருத்துவமனையில் தேவையான பணியாளர்களை பணியமர்த்த வேண்டும், நகரின் பெரும்பாலான இடங்களில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி வருவதை தடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.