காரைக்குடியில் மரம் சாய்ந்து விழுந்ததில் மாணவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
காரைக்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் முனீஸ்வரன், தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் அசோக்குமார் (13), டி.டி நகரில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். புதன்கிழமை மாலை பலத்த மழை பெய்ததால், மாணவர் பள்ளியிலேயே இருந்தார். பின்னர், மாலை 5 மணியளவில் அவரது தந்தை முனீஸ்வரன் இரு சக்கர வாகனத்தில் மகனை அழைத்துச் சென்றுள்ளார். வீட்டுக்குச் செல்லும் வழியில் சண்முகநாதன் சாலையோரத்திலிருந்த மரம் ஒன்று திடீரென வேரோடு பெயர்ந்து இவர்கள் மீது விழுந்தது. இதில், மாணவர் அசோக்குமார் பலத்த காயமடைந்தார். முனீஸ்வரனுக்கு கையில் காயமேற்பட்டது. அதையடுத்து, அப்பகுதியினர் இவர்கள் இருவரையும் மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். புதன்கிழமை இரவு, மாணவர் அசோக்குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மானகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அசோக்குமார் உயிரிழந்தார். இது குறித்து, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.