சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள வைரவன்பட்டியில் உள்ள ஸ்ரீ மூல பாலகால பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
வைரவன்பட்டி தேய்பிறை அஷ்டமி விழாவை முன்னிட்டு ஸ்ரீ மூல பாலகால பைரவர் தங்க கவசத்தில் எழுந்தருளி மாலை 4.45 மணியளவில் மகா கணபதி பூஜை செய்து தீபாராதனைகளுடன் பைரவ அஷ்டமி விழா தொடங்கியது. தொடர்ந்து கோ பூஜை, கஜ பூஜை மற்றும் லட்சார்சனை நடைபெற்றது. இரவு 9.30 மணியளவில் வஸ்திர யாகம் நடைபெற்று மகா பூர்ணாஹூதி நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.
யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கோயிலில் சுற்றுப்பிரகாரம் வழியாக சிவாச்சாரியர்கள் தலையில் சுமந்து வர சிவாச்சாரியார்கள் மலர் தூவி வரவேற்றார். பின்பு மூல கால பைவருக்கு பால், தயிர், மஞ்சள், விபூதி, பன்னீர், இளநீர் மற்றும் யாக வேள்விகளில் வைக்கப்பட்டிருந்த புனித நீராலும் அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து பாலகால பைரவர் பூக்களினால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபம் காட்டப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ராணி மதுராந்தக நாச்சியார் தலைமையில் மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் கண்ணாயிரம் மற்றும் ஸ்ரீ மஹா ஸ்வாமி பீடம் பாண்டிராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.