சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என இப் பகுதியைச் சேர்ந்த பல தரப்பினரும் நீண்ட காலமாக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
மானாமதுரையில் நீண்டகாலமாக தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு எப்போதும் இரு தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மானாமதுரை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டால் மானாமதுரை, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்துதான் தீயணைப்பு வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. திருப்புவனம் பகுதிக்கு மதுரை அனுப்பானடியிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வருகின்றன. சில சமயங்களில் இங்கு தீயணைப்பு வாகனங்கள் இல்லாத நிலை ஏற்பட்டால் சிவகங்கையிலிருந்து திருப்புவனத்துக்கு தீயணைப்பு வாகனங்கள் வர வேண்டிய நிலை இருந்து வருகிறது. மானாமதுரை வட்டத்திலிருந்து திருப்புவனம் தனி வட்டமாக உருவாகி 5 ஆண்டுகளாகிறது. ஒவ்வொரு வட்டத் தலைமையிடங்களிலும் தீயணைப்பு நிலையம் இருக்க வேண்டும் என்பது அரசின் விதிமுறையாகும். ஆனால் இதுவரை திருப்புவனத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படாத நிலை உள்ளது.
திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் ஏராளமான கிராமப்பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து சம்பவங்கள் ஏற்படுகின்றன. அப்போது மானாமதுரை, மதுரை அனுப்பானடி, சிவகங்கை ஆகிய இடங்களுக்குத்தான் தொடர்புகொண்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்படுகின்றன. நீண்டதொலைவிலிருந்து இந்த வாகனங்கள் வருவற்குள் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் சேதங்கள் அதிகமாகி விடுகின்றன.
எனவே திருப்புவனத்துக்கு தனியாக தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என இப் பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.