காரைக்குடியில் மொஹரம் பண்டிகையையொட்டி ஷியாபிரிவு முஸ்லிம்கள் துக்கதினமாக அனுசரித்து பிளேடால் தங்களது உடலில் கீறி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்குடி நியூடவுன் பகுதியில் வடிவேல் அம்பலம் லே-அவுட்டில் வசித்து வரும் ஷியா பிரிவு முஸ்லிம்கள் கண்கண்ணாடி விற்பனை செய்யும் தொழில் செய்துவருகின்றனர். இவர்கள் மொஹரம் பண்டியையொட்டி மொஹரம் மாதத்தின் முதல் தேதியில் இமாம் ஹூசைனின் மறைவையொட்டி தொழுகைக்கூடம் அமைத்து பஞ்சத்தான் எனும் கொடி மரத்தை வைத்து சிறப்புத்தொழுகை நடத்தினர். மேலும் 10 நாள்கள் விரதம் மேற்கொள்ளும் இவர்கள் துக்கத்தை கடைப்பிடிக்கும் வகையில் கருப்பு ஆடைகளை அணிந்து கொள்கின்றனர்.
இதைத் தொடர்ந்து 10 ஆம் நாளான வெள்ளிக்கிழமை மொஹரம் பண்டிகையையொட்டி சிறப்புத்தொழுகை நடத்தினர். பின்னர் படையலிட்டு துக்கப்பாடல்களை பாடி துக்கத்தைக் கடைப்பிடித்தனர்.
அப்போது ஆண்கள் பிளேடால் உடலில் கீறி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.