சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
வலையம்பட்டியைச் சேர்ந்த நாகலிங்கம் மகன் குமார் (32). இவர் சனிக்கிழமை, தனது இருசக்கர வாகனத்தில் காளையார்கோவில் நோக்கி வந்த போது, மர்மநபர் வழிமறித்து அவரிடம்ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் காளையார்கோவில் சரக காவல் ஆய்வாளர் மோகன் வழக்குப் பதிந்து விசாரணை செய்தார். விசாரணையில் சிவகங்கை அருகே உள்ள பனங்குடியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் ராஜா (26) என்பவர் குமாரை வழிமறித்து பணம் பறித்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, காளையார்கோவில் போலீஸார், ராஜாவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மேலும், அவரிடம் விசாரித்த போது, சிவகங்கை அருகே உள்ள கொல்லங்குடி, வாணியங்குடி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.