காரைக்குடி அருகே கே காவல் சோதனைச்சாவடியை கடக்க முயன்ற இளைஞர்களை வெள்ளிக்கிழமை நிறுத்தி விசாரணை செய்தபோது, போலீஸாருக்கு எதிர்ப்புத்தெரிவித்து இளைஞர் ஒருவர் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குன்றக்குடி அருகேயுள்ள சாலி கிராமத்தைச்சேர்ந்த சோலை மகன் சின்ராஜ் (23). தற்போது கூத்தலூரில் வசித்து வரும் இவர், வாகன ஓட்டுநராக உள்ளார். இரண்டு சக்கரவாகனத்தில் சின்ராஜ், மேலும் 2 பேருடன் காரைக்குடியிலிருந்து கூத்தலூருக்கு செல்லும் வழியில் கோவிலூர் காவல் சோதனைச்சாவடியை கடக்க முயன்றாராம்.
அவர்களை தடுத்த போலீஸார் 3 பேர் வாகனத்தில் சென்றது குறித்தும், மேலும் உரிய ஆவணம் கேட்டும் விசாரித்தனர். போலீஸாரின் விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்த சின்ராஜ், அருகிலிருந்த செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறினார்.
இதையடுத்து சின்ராஜிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், அவரை கோபுரத்தில் இருந்து கீழே இறங்கச்செய்தனர். பின்னர் அவரை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.