சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததுள்ளனர்.
காயஓடை, ஆண்டூரணி, மறவமங்கலம், கொல்லங்குடி, சாத்தரசன்கோட்டை, நேமம், புலியடிதம்மம், கல்லல், ஆண்டிச்சி ஊருணி, குலமங்கலம், சிலுக்கபட்டி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைக்கான பொருள்களை வாங்குவதற்காக காளையார்கோவிலுக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
மேலும், பரமக்குடி, இளையான்குடி, கல்லல், காரைக்குடி, திருச்சி, மதுரை, திருவாடானை, தொண்டி, ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், புதுக்கோட்டை, திண்டுக்கல், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் வழித்தடங்களில் முக்கியத்துவம் வாய்ந்த நகராகவும் திகழ்கிறது.
இந்நிலையில், காளையார் கோவிலில் மதுரை-தொண்டி சாலையின் இருபுறமும் உள்ள கடைகள் சாலையை ஆக்கிர
மித்தும் விளம்பரப் பலகை வைத்தும், இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே இதனைக் கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.