குரூப்-4 தேர்வில் தேர்ச்சிப் பெற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை அரசு "இ-சேவை' மையங்களில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி அரசு "இ-சேவை' மையங்கள் மூலமாக நடைபெற்று வருகிறது.
இதனால் சான்றிதழ் சரிபார்க்கும் பணிக்காக விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செல்லத் தேவையில்லை.
அண்மையில் நடைபெற்ற குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் அந்தந்த பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் அரசு "இ-சேவை' மையங்களில் தங்களது அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.