சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் அமமுக மக்களவை மற்றும் சட்டப்பேரவைத்தொகுதி வேட்பாளர்கள் கூட்டாக வாக்குச் சேகரித்தனர்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் தேர்போகி பாண்டி, மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அக் கட்சியின் சார்பில் மாரியப்பன் கென்னடி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் அமமுக வேட்பாளர்கள் இருவரும் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் திருப்புவனம் பகுதியில் ஏனாதி, மேலப்பூவந்தி, வெள்ளளூர் உள்ளிட்ட பல கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து வாக்குச் சேகரித்தனர்.
திருப்பாச்சேத்தி பகுதியில் மழவராயனேந்தல், கானூர், கருங்குளம், மீனாட்சிபுரம் உள்பட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மாரியப்பன் கென்னடி சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர், எந்த தவறும் செய்யாத எங்களை இந்த அரசு பழிவாங்கி தகுதி நீக்கம் செய்து விட்டது. இந்த அரசுக்கு பாடம் கற்றுத்தர மீண்டும் எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார். இந்த பிரசாரத்தின்போது மாவட்டச் செயலாளர் உமாதேவன், திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதி நிர்வாகிகள் உடன் சென்றனர்.