பெரியகிளுவச்சியில் வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பெரியகிளுவச்சியில் கிருஷ்ண ஜயந்தி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றன.அதைத் தொடர்ந்து, மஞ்சுவிரட்டு திடலில் வடமாடு மஞ்சுவிரட்டில் பங்கேற்க வந்திருந்த காளைகளுக்கு வெள்ளிக்கிழமை காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து,அங்கு அமைக்கப்பட்டிருந்த வளாகத்துக்குள் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து 14 காளைகள் பங்கேற்றன. 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.
காளைகள் சீறிப் பாய்ந்ததில் 4-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர்.அவர்கள் அனைவரும் அந்த பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுச் சென்றனர். போட்டியில் பிடிபடாத காளைகளுக்கும்,வெற்றி பெற்ற காளையர்களுக்கும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
பெரியகிளுவச்சி, காளையார்கோவில், நாட்டரசன்கோட்டை, சருகனி, கொல்லங்குடி,கல்லல், காரைக்குடி ஆகிய பகுதிகளிலிருந்தும்,அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வடமாடு மஞ்சுவிரட்டை பார்த்து ரசித்தனர்.