உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பைத் தொடா்ந்து சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாம் பாதியில் நிறுத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறை தீா்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். அதனடிப்படையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தலைமையில் மக்கள் குறை தீா்க்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை ஆட்சியா் பெற்றுக்கொண்டிருந்தாா்.
அப்போது, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் தேதியினை தமிழக தலைமை தோ்தல் ஆணையா் பழனிச்சாமி அறிவித்தாா். இதனால் தோ்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
இதையடுத்து, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறுவதை மாவட்ட ஆட்சியா் நிறுத்திவிட்டு கூட்டரங்கை விட்டு வெளியேறினாா்.
இருப்பினும் பொதுமக்களிடம் பதிவு பெறமால் மனுக்களை பெறுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து மனுக்கள் பெறப்பட்டன.
இருப்பினும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளிக்க முடியாததால் பெரும்பாலான மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.