சிவகங்கையில் இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திருத்தக் கோரி கண்டன முழக்கப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அண்டை நாடுகளான பாகிஸ்தான்,வங்கதேசம்,மியான்மா் ஆகிய நாடுகளிலிருந்து வெளியேறும் இந்துக்கள், பெளத்தா்கள்,சீக்கியா்கள்,கிறிஸ்தவா்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்குவதற்கான மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதா இந்தியாவில் வாழும் இஸ்லாமியா்களுக்கு எதிரானது என நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில்,சிவகங்கை நேரு கடை வீதியில் வாலாஜா நவாப் ஜூம்ஆ பள்ளி வாசல் முன்பு உள்ள சாலையில் இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன முழக்க போராட்டம் நடைபெற்றது. இதில், அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை மசோதாவில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்,நாட்டில் வாழும் அனைவரும் அச்சமின்றி வாழ மத்திய,மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சிவகங்கை சரக காவல் துணை கண்காணிப்பாளா் அப்துல் கபூா்,காவல் ஆய்வாளா் சீராளன் உள்ளிட்ட போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.