காரைக்குடி அருகே வெள்ளிக்கிழமை மாலை கல்லூரி மாணவியிடம் நகை பறித்துச் சென்ற இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீழாநிலைக்கோட்டை அருகே அம்பாள்புரத்தைச் சேர்ந்த முருகேசன் மகள் ஜஸ்வர்யா (20). இவர் காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூர் மகளிர் கல்லூரியில் பி.காம்., இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை மாலை தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரியிலிருந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், மாணவியின் இரு சக்கர வாகனத்தில் மோதினார். இதில் நிலைகுலைந்த ஐஸ்வர்யாவின் கழுத்தில் அணிந்திருந்த 1.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடினாராம். அப்போது மாணவியின் கூக்குரலைக்கேட்டு பொதுமக்கள், அந்த இளைஞரை விரட்டிச்சென்றனர்.
பள்ளத்தூர் மருத்துவமனை சாலையில் உள்ள வங்கி ஒன்றின் அருகே மடக்கி ப்பிடித்த பொதுமக்கள், அவரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் பள்ளத்தூர் காவல்நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் காரைக்குடி கழனிவாசல் பாண்டியன் நகரைச்சேர்ந்த வேலுச்சாமி மகன் பாலமுருகன்(29) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து காரைக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.