மானாமதுரையில் பேரூராட்சி அலுவலகம் அருகேயுள்ள சோணையா சுவாமி கோயிலில் பொங்கல் பூஜை விழா இரு நாள்கள் நடைபெற்றது.
குலாலர் சமுதாய மக்கள் சார்பில் நடந்த இவ் விழாவில் முதல்நாளில் குலாலர் சமுதாய மக்கள் தாயமங்கலம் சாலையில் உள்ள அலங்காரக்குளத்திலிருந்து கரகம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். அதன்பின் அங்கு தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர். முன்னதாக சோணையா சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து சுவாமிக்கும் கோயில் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடந்தன. பின்னர் பெண்கள் பொங்கல் வைத்து படைத்து படையல் வழிபாடு நடத்தினர். அதைத்தொடர்ந்து நள்ளிரவு கோயிலில் கிடா வெட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரண்டாவது நாள் விழாவில் இரவு சோணையா சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். வைகையாற்றுக்குள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.