சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தை புதிய கட்டடத்துக்கு எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென மாற்றியதால், பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.
திருப்பத்தூர் பேரூராட்சி 18 வார்டுகளைக் கொண்டது. இந்நகரின் பேரூராட்சி அலுவலகமானது பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்தது. இந்நிலையில், புதிய பேரூராட்சிக் கட்டடம் கட்டுவதற்கான இடம் வாரச் சந்தையிலுள்ள ஒரு பகுதி தேர்வு செய்யப்பட்டு, 6 மாதங்களுக்கு முன் தமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலம் இந்த அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர், தேர்தல் காரணமாக அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுவது தாமதமாகியது. அதையடுத்து, மக்களவைத் தேர்தல் முடிந்து ஒரு மாத காலமாகியும் அலுவலகம் மாற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென கடந்த 14 ஆம் தேதி பேரூராட்சி அலுவலகம் புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், பழைய அலுவலகக் கட்டடம் முன்பாக இது குறித்து அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. இதனால், தங்கள் அலுவல் காரணமாக பழைய கட்டடத்துக்குச் சென்ற பொதுமக்கள், அலுவலகம் மூடிக் கிடப்பதைக் கண்டு குழம்பினர்.
அதையடுத்து, விசாரித்ததில் புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்ட விவரத்தை அறிந்த பொதுமக்கள், அங்கிருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள புதிய அலுவலகம் செல்ல மிகவும் சிரமப்பட்டனர். இருப்பினும், புதிய அலுவலகத்தில் இணைப்புப் பணிகள் நடைபெறுவதால், பொதுமக்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பழைய அலுவலகத்தில் அறிவிப்பு பலகை வைத்திருந்தால், மக்களின் சிரமம் தவிர்க்கப்பட்டிருக்கும் என சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.