சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டியில் நடைபெற்ற அவரது பிறந்த நாள் விழாவில், கண்ணதாசன் இலக்கியப் பேரவை சார்பில், அவரது இஷ்ட தெய்வமான மலையரசி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கவிஞரின் கவிதாஞ்சலி நினைவு கூரப்பட்டது. பின்னர், அருகில் உள்ள அவரது உருவச் சிலைக்கு, இலக்கியப் பேரவைத் தலைவர் எஸ்.எம். பழனியப்பன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராம. சுப்புராம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஸ்டாலின், காங்கிரஸ் சார்பில் பொதுக் குழு உறுப்பினர் இ.எம்.எஸ். அபிமன்யு, வட்டாரத் தலைவர்கள் பன்னீர்செல்வம், வழக்குரைஞர் கணேசன், காங்கிரஸ் நகர் தலைவர் திருஞானம், அண்ணாமலைச் செட்டியார் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து, பாரதி இலக்கிய கழகம் மற்றம் நூலக வாசகர் வட்டம் சார்பில், சிந்தனைக் கருவூலம் கண்ணதாசன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.ஆர். பெரியகருப்பன், கவிஞர் பொற்கை பாண்டியன் ஆகியோர் கண்ணதாசன் உருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்தனர்.
விழாவுக்கு, பாரதி கலை இலக்கிய கழகத் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். சிறுகூடல்பட்டி அம்பலக்காரர் வயிரவன், எழுத்தாளர் எஸ்.எல்.எஸ். பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், எழுத்தாளர் ரிஷிகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன.