மத்திய, மாநில அரசுகளின் ஊழல்கள் குறித்தே பிரசாரம் செய்வோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிவகங்கையில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகளின் ஊழல்கள் குறித்தே வரும் தேர்தல்களுக்கான பிரசாரமாக இருக்கும் என ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவித்துள்ளோம். மதச்சார்பற்ற கூட்டணியில் திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையானது ஏழை, எளிய மக்களின் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. பாஜக தான் இந்து மதம் தவிர்த்து மற்ற மதத்தினரை புண்படுத்துகின்றனர். சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். ஆகவே மக்களுக்கு எதிரான அரசாகவே பாஜக உள்ளது. இதுதவிர, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் தற்போது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருக்கும் பாஜக, அதிமுக அரசுகள் சாமானிய மக்களுக்கு எதிரான அரசு என்றார்.