ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் நிதியுதவி கோரி விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்திலிருந்து ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.20 ஆயிரம் பயண நிதியுதவியாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்துக்கு நேரடியாக வருகை தந்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும், விண்ணப்பித்தலுக்கான நிபந்தனைகள், வழிமுறைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ் இணைப்புகளுடன் அஞ்சல் மேல்
உறையில் "ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம் 2019-2020' என்று குறிப்பிட்டு வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள், ஆணையர், சிறுபான்மையினர் நலத் துறை, கலச மகால் பாரம்பரிய கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை- 600 005 என்ற முகவரிக்கு கிடைக்கும்படி அனுப்ப வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.