திருப்பத்தூர் அருகேயுள்ள செண்பகம்பேட்டையில் புதன்கிழமை இலவச சட்ட உதவி முகாம் மற்றும் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர் நீதிமன்ற வட்ட சட்டப்பணிகள் குழு சார்பிலும் வருவாய்த்துறையினர் சார்பிலும் இம்முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்முகாமிற்கு திருப்பத்தூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சாமுண்டீஸ்வரிபிரபா தலைமை வகித்தார்.
வட்டாட்சியர் தங்கமணி முன்னிலை வகித்தார். வழக்குரைஞர் ராஜ்மோகன், மோட்டார் வாகனச் சட்டம் பற்றியும், துரைவேலவன் விபத்துகால இழப்பீடுகள் குறித்தும் பேசினர். தொடர்ந்து பேசிய நீதிபதி, பெண்களின் உரிமை மற்றும் சட்டம் சார்ந்த சொத்துப் பரிவர்த்தனைகள் பெண்களின் சட்டவிழிப்புணர்வு முதலியன குறித்துப் பேசினார்.
தொடர்ந்து வருவாய்த்துறையினர் சார்பில் பொதுமக்களின் குறைதீர் முகாம் நடைபெற்று மனுக்கள் பெறப்பட்டு பொதுமக்களின் குறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இதில் மண்டல துணை
வட்டாட்சியர் ராஜா, வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், கிராம செயலர் மற்றும் பணித்தள பொறுப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர் முருகேசன் வரவேற்றார். வழக்குரைஞர் ராஜ்மோகன் நன்றி கூறினார்.