முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராம.அருணகிரி, ராம.சுப்புராம், மாவட்டப் பொருளாளர் எஸ்.எம்.பழனியப்பன், துணைத் தலைவர் வழக்குரைஞர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் அபிமன்யு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில சிறப்பு பேச்சாளர்கள் கவிஞர் அப்பச்சி சபாபதி, சிங்கை தர்மன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மகிளா காங்கிரஸ் துணைத் தலைவி வித்யாகணபதி, மாவட்ட மகளிரணித் தலைவி ஏலம்மாள் ராஜேந்திரன், மற்றும் வட்டாரத் தலைவர்கள் ஜெயராம், பன்னீர்செல்வம், வீரமணி, முன்னாள் தலைவர் செல்வமணி, சிங்கம்புணரி நகர் தலைவர் பழனிவேல்ராஜன், கீழச்சிவல்பட்டி நகர்த் தலைவர் அழகுமணிகண்டன் மற்றும் மாவட்ட அளவிலான நகர் ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், நாடு பொருளாதார பின்னடைவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் கோஷமிட்டனர்.
முன்னதாக நகரத் தலைவர் திருஞானசம்மந்தம் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக நிர்வாகி பிரசாத் நன்றி கூறினார்.