சிவகங்கையில் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் தர்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை அரண்மனை வாசல் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலர் சிவசாமி தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர்கள் ராஜா, செல்வி, குஞ்சரம், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலச் செயலர் சாத்தையா போராட்டத்தை தொடக்கி வைத்தார். இதில், கட்டடத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் நலவாரியங்களில் உள்ள நிதி இருப்புத் தொகையை கைப்பற்ற நினைக்கும் முடிவினை அரசு கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிராக இயற்றப்பட்டுள்ள சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இப்போராட்டத்தில், தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கண்ணகி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கட்டடத் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.