பத்தாம் வகுப்பு படித்த பள்ளி மாணவியை கடத்திச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை சிவகங்கை நகர் போலீஸார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
சிவகங்கை இந்திரா நகரைச் சேர்ந்தவர் முத்துச்செல்வம் (34). ஆட்டோ ஓட்டுநரான இவர் சிவகங்கையைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமி ஒருவரை தினசரி பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லையாம்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் சிறுமி கடத்தப்பட்டிருப்பதும், முத்துச்செல்வத்துடன் நாமக்கல் அருகில் உள்ள செவந்திப்பட்டி எனும் கிராமத்தில் சிறுமியுடன் தங்கி இருந்து ஒரு மில்லில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதுபற்றி தகவலறிந்து அங்கு சென்ற போலீஸார் சிறுமியை மீட்டு, முத்துச்செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட முத்துச்செல்வத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனுக்கு பரிந்துரை செய்தார். அவரது உத்தரவின் பேரில் முத்துச்செல்வத்தை சிவகங்கை நகர் போலீஸார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.