மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் பேராசிரியருக்கு சிறந்த விஞ்ஞானிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் விஞ்ஞானி கள் தேர்வுசெய்யப்பட்டு மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய நீர் மேலாண்மை இயக்கத்தின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பாண்டுக்கான (2019)விருதுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் பேராசிரியர் செந்தூர்குமரன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து, மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் விருது வழங்கும் விழா கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி புதுதில்லியிலுள்ள விக்யான் பவனில் நடைபெற்றது. இதில், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தலைமை வகித்து குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் பேராசிரியர் செந்தூர்குமரனுக்கு சிறந்த விஞ்ஞானிக்கான விருதினை வழங்கினார். அப்போது,கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.பாலச்சந்திரன் உடனிருந்தார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் செந்தூர்குமரன் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வயல்வெளி சோதனைத் திட்டம் மூலம் நுண்ணீர் பாசன உயர் தொழில் நுட்பத்தின் காரணமாக 40 சதவீதம் நீர் சேமிப்பு, 40 சதவீதம் வேலையாள்கள் சேமிப்பு, 32 சதவீதம் மின்சாரம் சேமிப்பு ஆகியவற்றை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் இவ்விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.