மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்று வரும்  சித்திரைத் திருவிழாவில்

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்று வரும்  சித்திரைத் திருவிழாவில் 8 ஆம் நாள் விழாவாக புதன்கிழமை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்த திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. 
 இக்கோயிலில் கடந்த 10 ஆம் தேதி முதல் சித்திரைத் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. திருவிழா நாள்களில் தினமும் இரவு அம்மனும் சுவாமியும் அலங்காரத்துடன் மண்டகப்படிகளில் எழுந்தருளி பின்னர் வீதி உலா வந்தனர். 
  விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மனும், பிரியாவிடை சமேதமாய் சோமநாதர் சுவாமியும் அலங்காரத்துடன் சிவகங்கை மகாராஜா மண்டபத்திலிருந்து புறப்பட்டு கோயில் மண்டபத்தில் கண்ணூஞ்சலாகி மாலை மாற்றி  எஸ்.பி.பொன்னம்பலம்பிள்ளை குமாரர்கள் மண்டகப்படிக்கு எழுந்தருளினர்.
 அதன்பின் திருமணத்துக்கான சம்பிரதாய பூஜைகள் தொடங்கி நடந்தன. அதைத் தொடர்ந்து பகல் 11.50 மணிக்கு சோமநாதர் சுவாமி சார்பில் ஆனந்தவல்லி அம்மனுக்கும் பின்னர் பிரியாவிடைக்கும் திருமாங்கல்ய நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது கோயிலுக்கு வெளியேயும் பக்தர்கள் நின்று திருக்கல்யாண வைபவத்தை பெரிய திரைகளில் பார்த்தனர். சக்கரை என்ற தெய்வசிகாமணிப்பட்டர், ராஜேஷ்பட்டர், குமார் பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் திருக்கல்யாண சடங்குகளை நடத்தி வைத்தனர்.
 திருக்கல்யாணம் முடிந்ததும் அம்மனும் சுவாமியும் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி முடிந்து பலவகை தீபாராதனைகள் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் திரண்டிருந்த திருமணமான பெண்கள் புதுத் தாலிக்கயிறு கட்டிக் கொண்டனர். காலையிலிருந்து இரவு வரை பெண்கள் கோயிலுக்கு வந்து மாவிளக்கு பூஜை நடத்தி ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமியை  தரிசனம் செய்தனர். திருக்கல்யாணம் முடிந்ததும் கோயிலுக்கு பின்புறம் நடந்த திருமண விருந்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இரவு அம்மனும் சுவாமியும் திருமணக் கோலத்தில் பூப்பல்லக்கிலும், யானை வாகனத்திலும் எழுந்தருளி கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில்  உலா வந்தனர்.
இன்று தேரோட்டம்:  ஆனந்தவல்லி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 9 ஆவது நாள் மண்டகப்படியாக வியாழக்கிழமை (ஏப். 18) காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் தேரோட்ட வைபவம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com