கல்லல் அருகே மர்மமான முறையில் முதியவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை கொலை வழக்காக பதிவுச் செய்யக் கோரி அவரது உறவினர்கள் சிவகங்கை - மானாமதுரை சாலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் கல்லலைச் சேர்ந்தவர் மகாதேவன் மகன் திருநாவுக்கரசு (58). சமூக ஆர்வலரான இவர் திங்கள்கிழமை மாலை அதே பகுதியில் உள்ள மணிமுத்தாறு ஆற்றில் உடலில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார்.
இதையடுத்து இவரது உடலை கல்லல் போலீஸார் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர்.
இந்நிலையில் அவருடைய உடலை உடற்கூறாய்வு செய்யும் போது விடியோ எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் விடியோ எடுக்க மறுத்து, திருநாவுக்கரசின் உடற்கூறாய்வு செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டதாம்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் அவரது மரணம் குறித்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை - மானாமதுரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த சிவகங்கை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மங்களேஸ்வரன், சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் மோகன், துணை வட்டட்சியர் சுந்தரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.