முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி விமர்சித்துள்ளதை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களான முன்னாள் எம்எல்ஏக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காரைக்குடி முன்னாள்சட்டபேரவை உறுப்பினர் என்.சுந்தரம் தலைமையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.என். கந்தசாமி, வி. ராஜசேகரன், ராம. அருணகிரி, ராம. சுப்புராம், ஆர்.எம். பழனிச்சாமி, பி.எஸ்.விஜய குமார், எஸ்.ராஜ்குமார், எம். தண்டபாணி, பி. வேல்துரை ஆகியோர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்திருப்பது:
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ப. சிதம்பரத்தை விமர்சித்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
யாரையோ திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக பேசியுள்ளார். ப. சிதம்பரம் தமிழக மக்களுக்கு என்ன திட்டங்களைக் கொண்டு வந்தார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
அதில் குறிப்பாக திருமயத்தில் பெல் தொழிற்சாலை, சிவகங்கையில் சர்க்கரை ஆலைகள், போர்டு கார் நிறுவனம், சிறு கிராமங்களுக்குக்கூட வங்கிகள் மற்றும் ஏடிஎம் வசதிகள் என அவர் பல்வேறு சாதனைகள் செய்துள்ளார்.
அரசியல் நாகரிகம் தெரியாத முதல்வர், இதுபோன்ற பேச்சுக்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று தமிழக சட்டபேரவை காங்கிரஸ் தலைவர் கேஆர். ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
ப. சிதம்பரத்தின் மீதான தமிழக முதல்வரின் விமர்சனம் தரம் தாழ்ந்தது. ப. சிதம்பரத்தின் மீது தனிமனித தாக்குதல் நடத்தியிருப்பதை எவராலும் பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக முதல்வரை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.