சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வீரழகர் கோயிலில் ஆடிப் பிரமோற்சவ திருக்கல்யாணம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில் ஆடிப் பிரமோற்சவ விழா கடந்த 7 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி நாள்தோறும் இரவு வீரழகர் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு சௌந்திரவல்லித் தாயார் சன்னிதி முன்பு சுந்தரராஜப் பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளினார். அதன்பின் யாகம் வளர்க்கப்பட்டு திருமணத்துக்கான சம்பிரதாய பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. பெருமாளுக்கும், சௌந்தரவல்லித் தாயாருக்கும் காப்பு அணிவிக்கப்பட்டது. கோயில் பரம்பரை ஸ்தானீகம் பாபுஜி சுந்தர், கோயில் அர்ச்சகர் கோபிமாதவன் உள்ளிட்ட ஆச்சாரியார்கள் திருக்கல்யாண சம்பிரதாய பூஜைகளை நடத்தி வைத்தனர். பின்னர் இரவு 7 மணிக்கு திருமாங்கல்யநாண் சுந்தரராஜப்பெருமாள் கையில் வைத்து எடுக்கப்பட்டு மூலவர் சௌந்திரவல்லித்தாயார் அருகே எழுந்தருளியிருந்த உற்சவர் சௌந்திரவல்லித்தாயாருக்கு அணிவிக்கப்பட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதன்பின் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆடிப் பிரமோற்சவ விழாவின் 9 ஆம் நாள் மண்டகப்படியாக வரும் 15 ஆம் தேதி இரவு மின்விளக்கு தேர்பவனி நடைபெறுகிறது.