சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரசு கலைக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த தொகுதி எம்.எல்.ஏ எஸ்.நாகராஜன் தெரிவித்தார்.
மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்.நாகராஜன் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். அவர் நன்றி தெரிவித்து மக்களிடையே செவ்வாய்க்கிழமை பேசியதாவது: மானாமதுரை தொகுதி மக்கள் எப்போதும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆளும் அதிமுக அரசு தொகுதி மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.
மேலும் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார். தற்போது மானாமதுரை வைகையாற்றுக்குள் தரைப்பாலம் அமைக்க அரசு ரூ. 9 கோடி ஒதுக்கியுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கவுள்ளது.
மானாமதுரையில் அரசு கலைக் கல்லூரி தொடங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. திருப்புவனம், இளையான்குடியில் விரைவில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்றார்.
அப்போது திருப்புவனம் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள், மானாமதுரை நகரச் செயலாளர் விஜி.போஸ், முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஜெயபிரகாஷ், கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் தெய்வேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.