தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி அளவில் அண்மையில் நடைபெற்ற கட்டுரை, கவிதை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்தார்.தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் ப.நாகராஜன் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவிலான மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி நடைபெற்றது.
இதில் சிவகங்கை மாவட்டத்தில் 44 பள்ளிகளிலிருந்து 144 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழையும் மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி துறையின் கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.