தோட்டக்கலைத் துறையின் சார்பில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காளையார்கோவில் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் மு.சத்யா புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குறைந்த நீர் தேவையில் அதிக மகசூல் பெறக்கூடிய தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும் பல்வேறு திட்டங்கள் தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் காய்கறிப் பயிர்கள், பழப்பயிர்கள், சுவைதானியப் பயிர்கள் மற்றும் தென்னை முதலிய அனைத்து தோட்டக்கலைப் பயிர்களுக்கும் சொட்டுநீர்ப் பாசனம் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படும். அந்தவகையில், காளையார்கோவில் வட்டாரத்துக்கு நடப்பு நிதியாண்டில் 360 ஹெக்டேர் பரப்புக்கு தெளிப்பு மற்றும் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.194.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே காளையார்கோவில் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதிக்கு நேரடியாக வரும் உதவி தோட்டக்கலை அலுவலர்களிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு நாட்டரசன்கோட்டை பிர்க்காவை சேர்ந்த விவசாயிகள் 9788540747 என்ற எண்ணிலும், காளையார்கோவில் பிர்க்காவைச் சேர்ந்த விவசாயிகள் 9003759970 என்ற எண்ணிலும், மல்லல் மற்றும் மறவமங்கலம் பிர்க்காவைச் சேர்ந்த விவசாயிகள் 8838715890 என்ற எண்ணிலும், சிலுக்கபட்டி, மதகுபட்டி மற்றும் ஒக்கூர் பிர்காவைச் சேர்ந்த விவசாயிகள் 9629483571 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு நுண்ணீர்ப் பாசனத் திட்டத்துக்கு பதிவு செய்தல் உள்பட அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.