சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் முன்னறிவிப்பின்றி தொடர் மின்தடை ஏற்படுவதால், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் அவதிப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
திருப்புவனம், திருப்பாச்சேத்தியில் துணை மின்நிலையங்கள் உள்ளன. இங்கிருந்து திருப்புவனம், மடப்பரம், பூவந்தி, திருப்பாச்சேத்தி, தூதை, மழவராயனேந்தல், தஞ்சாக்கூர், மார்நாடு, பழையனூர், கொந்தகை, பொட்டப்பாளையம், மணலூர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது.
கடந்த சில நாள்களாக, எந்தவொரு முன்னறிவிப்பின்றியும் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல், பொதுமக்கள் அவதியடைந்து வருவதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.
தற்போது, தேர்வு நெருங்கி வருவதால் பள்ளிகளில் நடைபெறும் அறிவியல் செய்முறை தேர்வு மற்றும் தினசரி பாடங்களை படிக்க முடியாமல் மாணவ, மாணவியர் மிகவும் அவதியடைந்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, இப்பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.