சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் வேதியரேந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இச் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி கே.வீரபாண்டி கூறியது:
விவசாயிகள் சங்கம் சார்பில் அளித்த புகாரின் பேரில் சாக்கூர், சாலைக்கிராமம், நாகமுகுந்தன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அதேபோல் மானாமதுரை அருகேயுள்ள வேதியரேந்தல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திலும் பயிர் காப்பீடு திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகத்துக்கும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் இந்த முறைகேடு சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மானாமதுரை பகுதி முழுவதும் விவசாயிகள் சங்கம் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.