சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 196 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டு, அவை விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சிவகங்கையில் உள்ள வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது : தமிழக அரசின் உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 69 அங்கன்வாடி மையங்கள் அந்தந்த பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
அந்த மையங்களில் தற்போது இடைநிலை பள்ளிகளில் பணியில் உள்ள உபரி ஆசிரிய, ஆசிரியைகள் 31 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள 38 இடங்களுக்கு 10 மாணவர்களுக்கு கீழே உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை மாற்று பணியில் நியமிக்கப்பட உள்ளனர். அங்கன்வாடி மையங்களில் 3 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் புதிதாக தொடங்கப்பட உள்ள எல்.கே.ஜி வகுப்பிலும், 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் யு.கே.ஜி வகுப்பிலும் சேர்க்கப்படுவர். அவ்வாறு படிக்கும் குழந்தைகள் அதே பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்து தனது படிப்பை தொடரலாம்.
உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகளின் வருகையை உறுதி செய்யும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு இயந்திரம் முறை அமல்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அதனடிப்படையில்,சிவகங்கை மாவட்டத்தில் முதல் கட்டமாக மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 196 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு இயந்திரம் பொருத்தும் வகையில் ஒரு பள்ளிக்கு 2 இயந்திரம் வீதம் 392 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அவை விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இவை தவிர மாவட்டத்தில் உள்ள 12 வட்டார வள மையம்,12 வட்டார கல்விஅலுவலகம், 3 மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு தலா ஒரு இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தவுடன் அந்தந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் காலை 9 மணிக்கு பள்ளி தொடங்கும் போதும் மாலை 4 .30 மணிக்கு பள்ளி நிறைவு செய்யும் போதும் இந்த இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இதேபோன்று, கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் காலை மற்றும் மாலையில் பதிவு செய்ய வேண்டும் என சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து தெரிவித்தார்.