வாழ்நாளில் ஏழைகளுக்கு சேவை செய்வதன் மூலம் இறைவனை அடையலாம் என பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தெரிவித்தார்.
சிவகங்கையில் பழனி பாதயாத்திரை குழுவின் 39-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு காசி விசுவநாதர் கோயில் முன்பு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இறைவனை அடைய பக்தி நெறியே அல்லது தொண்டு நெறியே' எனும் தலைப்பிலான பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் நடுவராக பங்கேற்ற பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசியது: தமிழ் மொழி பக்தி மொழி ஆகும். அதன் இனிமை அனைத்து தரப்பினரையும் தன் வசம் ஈர்க்கக்கூடிய காந்த சக்தி கொண்டதாகும். ஞானிகள் பிறந்த தேசம் நமது பாரத தேசத்தில் இறை மீது கொண்ட பக்தியின் காரணமாக எண்ணற்ற அருள் செயல்களை இந்த மண்ணில் அவதரித்த ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர். இருள் என கூறிக் கொண்டு இருப்பதைக் காட்டிலும் அங்கு வெளிச்சம் தர முன் வர வேண்டும். பக்தி மார்க்கத்தின் வழியை பின்பற்றி ஏழைகளுக்கு உதவ முன் வர வேண்டும். தம் வாழ்நாளில் ஏழைகளுக்கு சேவை செய்வதன் மூலம் அனைவரும் இறைவனை அடையலாம் என்றார்.
இதில்,பக்தி நெறியே எனும் தலைப்பில் கவிஞர்கள் லெட்சுமணப் பெருமாள், மலர்விழி ஆகியோர் பேசினர். தொண்டு நெறியே எனும் தலைப்பில் பேராசிரியர்கள் கண்ணன், மனோன்மணி ஆகியோர் பேசினர். விழாவுக்கு முன்னதாக எழுத்தாளர் ஈஸ்வரன் எழுதிய போதிமரம்' எனும் நூலை பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் வெளியிட, அதனை தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் புஷ்பராஜ் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில்,இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் டி.என்.அன்புதுரை, பழனி பாதயாத்திரைக் குழுத் தலைவர் ரெத்தினம், செயலர் பாலு, துணைத் தலைவர் பாண்டி உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.