குறைந்த விலையில் மரக்கன்றுகள் பழச் செடிகள் பெற விண்ணப்பிக்கலாம்

மரக்கன்றுகள் நடவு செய்ய விரும்பும் விவசாயிகள், பயனாளிகள் குறைந்த விலையில் மரங்கன்றுகள், பழச்செடிகளை


மரக்கன்றுகள் நடவு செய்ய விரும்பும் விவசாயிகள், பயனாளிகள் குறைந்த விலையில் மரங்கன்றுகள், பழச்செடிகளை பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட தோட்டக்கலை இயக்குநர் ஜே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் தரமான தோட்டக்கலை மரக்கன்றுகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், ஆண்டுதோறும் நெல்லி, சப்போட்டா, மாதுளை, புளி, எலுமிச்சை, நாவல் மற்றும் விளாம்பழம் போன்ற நமது பாரம்பரிய பழக்கன்றுகளும் கறிவேப்பிலை, கொடுக்காப்புளி, முந்திரி, வேம்பு, மலைவேம்பு, புங்கம், தேக்கு மற்றும் சவுக்கு போன்ற மரங்களும், மல்லிகை, வெட்சி மற்றும் அரளி போன்ற பூச்செடிகளும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற நடவுச் செடிகள் தவிர பல்வேறு பழக்கன்றுகள் மற்றும் இதர தோட்டக்கலை பயிர்களின் நடவுச் செடிகள் விருப்பத்தின் அடிப்படையில் உற்பத்தி செய்தும் வழங்கப்படும்.அந்த வகையில் இந்தாண்டு அரசு தோட்டக்கலை பண்ணைகளில் அழகுச் செடிகள் ரூ.5 முதல் ரூ.10 வரையிலும், வேம்பு, புங்கம் மரச்செடிகள் ரூ.10 முதல் ரூ.20 வரையிலும், பழச் செடிகள் ரூ.8 முதல் ரூ.60 வரையிலும் மலர்ச் செடிகள் ரூ.8 முதல் ரூ.30 வரையிலும் விற்பனை செய்யப்பட உள்ளன. 
ஆகவே, மரக்கன்றுகள் நடவு செய்ய விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், பயனாளிகள் குறைந்த விலையில் மரங்கன்றுகள், பழச் செடிகளை பெற தங்களது வட்டார அளவில் செயல்படும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அல்லது மாவட்ட அளவிலான தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்தையோ அணுகி விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com