சிவகங்கை மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குநரைக் கண்டித்து ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள ராமச்சந்திரனார் நினைவு பூங்கா முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் காந்திமதி தலைமை வகித்தார்.
இதில் அச்சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் வாசுகி, மாநில பொதுச் செயலர் சுகந்தி, மாநிலச் செயலர் சசிகலா, மாவட்டச் செயலர் சண்முகப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில், பாலியல் புகாருக்கு ஆளான சிவகங்கை மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குநரை பணிநீக்கம் செய்ய வேண்டும், சிகிச்சை பெற வரும் பெண்களுக்கும், மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர், செவிலியர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தின் ஒன்றியச் செயலர் அமுதப்பிரியா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.