காரைக்குடி பாரதிதாசன் தமிழ் பேரவை சார்பில் 27 ஆம் ஆண்டு பாரதிதாசன் தமிழ் விழா காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் ஜூலை 20 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து பாரதிதாசன் தமிழ் பேரவைத் தலைவர் சாமி. திராவிடமணி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பாரதிதான் தமிழ் விழாவுக்கு முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் தலைமை வகிக்கிறார். தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கேஆர்.ராமசாமி தொடக்கவுரையாற்றுகிறார். கம்பன் அறநிலைத் தலைவர் சத்தி அ. திருநாவுக்கரசு வாழ்த்திப் பேசுகிறார்.
இவ்விழாவின்போது திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி எழுதிய "தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்' எனும் நூலை தி.க மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் வெளியிட்டு ஆய்வுரையாற்றுகிறார். தமிழ் எழுத்தாளர் மறைந்த தி. பெரியார் சாக்ரடீசு நினைவாக விருதுகள் வழங்கப்படவிருக்கிறது. அதைத்தொடர்ந்து நடைபெறும் பாரதிதாசன் தமிழ் விழாவில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் சிறப்புரையாற்றுகிறார். விழாவில் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை பாரதிதாசன் பேரவை அமைப்பாளர் தி. என்னாரெசு பிராட்லா மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர் என்றார்.