சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி நான்குவழிச்சாலையில் முன்னறிவிப்பின்றி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மதுரை-ராமநாதபுரம் இடையே நான்குவழிச்சாலையில் திருப்பாச்சேத்தியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சுங்கக்கட்டணம் வசூலிக்கும் உரிமம் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், இந்த சுங்கச்சாவடியில் சாலையை கடந்து சென்ற வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க கேட் மூடப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வாகன ஓட்டிகள் தகராறில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக சுங்கச்சாவடி அமைந்துள்ள பகுதியில் சாலையின் இரு புறமும் நீண்டதொலைவுக்கு வாகனங்கள் வரிசையாக நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு பேருந்துகளின் நடத்துநர்கள் உயர் அதிகாரிகளின் உத்தரவு இல்லாமல் சங்கக்கட்டணம் கொடுக்க முடியாது எனக்கூறி ஊழியர்களிடம் தகறாறில் ஈடுபட்டனர். அதன்பின் அரசு பேருந்துகள் மட்டும் கட்டணமின்றி செல்ல அனுமதிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து பிற வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தி சுங்கச்சாவடியை கடந்து சென்றன.