சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலர் பி.முத்துக்கருப்பன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலர் ஆர்.மணியம்மா, மாவட்டத் தலைவர் ஆர்.கே.தண்டியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து, கடும் வறட்சி நிலவுவதால் சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஆண்டு ஒன்றுக்கு 150 நாள்கள் வேலையும், தினசரி ரூ.229 சம்பளமும் வழங்க வேண்டும், மாவட்டம் முழுவதும் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் கே.வேங்கையா, கந்தசாமி, பஞ்சவர்ணம், க.பாண்டி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.