பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, சிவகங்கையில் உள்ள மன்னர் துரைசிங்கம் அரசினர் கலைக் கல்லூரி மாணவ, மாணவியர் வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில், பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இது குறித்து தகவலறிந்து வந்த கல்லூரி முதல்வர் பா. ஹேமலதா மற்றும் அனைத்துத் துறை தலைவர்களும் மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வகுப்புகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், மாணவ, மாணவியர் மறுத்ததுடன், முழக்கங்களை எழுப்பியவாறு கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறினர். இதில், 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.