திருவாடானை அருகே வெள்ளிக்கிழமை மணல் கடத்திய 3 பேரை கைது செய்த போலீஸார் டிராக்டர் மற்றும் 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
திருவாடானை அருகே ஆர்.எஸ்.மங்கலம் கோட்டக்கரை ஆற்றுப்பகுதியில் மணல் கடத்துவதாக சேத்திடல் குரூப் கிராம நிர்வாக அலுவலர் சசிக்குமார் போலீஸில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வெள்ளிக்கிழமை இரவு ஆர்.எஸ்.மங்கலம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது எட்டியதிடலைச் சேர்ந்த தோமையா (42) டிராக்டரில் மூலம் மணல் கடத்தியது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தோமையாவை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர். அதேபோல் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் பாம்பாற்றில் மணல் கடத்துவதாக சிறுகம்பையூர் கிராம நிர்வாக அலுவலர் யாகப்பன் போலீஸில் புகார் அளித்தார்.
அதன்பேரில் எஸ்.பி.பட்டிணம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய புதுகோட்டை மாவட்டம் ஒட்டாங்குறிச்சியைச் சேர்ந்த கண்ணன் (52), ஜெயராஜ் (45) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.