சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே சனிக்கிழமை வேனும், இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் பொறியியல் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிவகங்கை கலைமகள் தெருவைச் சேர்ந்த செல்லப்பாண்டி மகன் அருண்கிஷோர் (20). இவர் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், அருண்கிஷோர் மதுரையிலிருந்து சிவகங்கைக்கு இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை வந்தார். சித்தலாங்குடி விலக்கு அருகே வந்த போது எதிரே வந்த வேன் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அருண்கிஷோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பூவந்தி போலீஸார் அங்கு சென்று அவரது சடலத்தைக் கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி பூவந்தி போலீஸார் வழக்குப் பதிந்து பெத்தானேந்தலைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் சங்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.