வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் மோசடி செய்தவரை சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சனிக்கிழமை மாலை கைது செய்தனர்.
சிவகங்கை அருகே கீழப்பூங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் (32). இவருக்கு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே காட்டுவா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த நாச்சியப்பன்(36) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துக்குமார் ஆகிய இருவரும் அறிமுகம் ஆகியுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் கதிர்வேலிடம் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 19.7.18 ஆம் தேதி ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்தைப் பெற்று கொண்டனராம். பல மாதங்கள் கடந்த நிலையில் வேலை வாங்கித் தரவில்லை. மேலும் வாங்கிய பணத்தையும் திருப்பி தரவில்லையாம்.
இதுகுறித்து கதிர்வேல் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரனிடம் அண்மையில் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் நாச்சியப்பன் மற்றும் முத்துக்குமார் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக நாச்சியப்பனை கைது செய்த போலீஸார், முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.