தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் என முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
அதிமுக அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ராஜகண்ணப்பன் அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து திமுக கட்சி தலைமையை சந்தித்து விட்டு, சிவகங்கைக்கு வியாழக்கிழமை மாலை வந்த அவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், திமுகவின் சிவகங்கை மாவட்டச் செயலர் பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், மானாமதுரை (தனி) சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளர் இலக்கியதாசன், காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுகவைப் பொருத்தவரை ஜனநாயகம் இல்லை. 11 பேர் கொண்ட குழு அமைத்து அதன் தலைமையில் தான் கட்சியை நடத்த வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அதன்படி யாரும் செயல்படவில்லை.
அதிமுகவின் கோட்டையாக விளங்கிய தென்மாவட்டங்களை கூட்டணி கட்சிகளுக்கு எந்தவித பிரதிநிதித்துவமின்றி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்பட அனைத்து தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும்.
திமுக கூட்டணியை ஆதரித்து மார்ச் 25 முதல் தமிழகம் முழுவதும் பிரசாரம் தொடங்க உள்ளேன். தற்போதைய அதிமுக அரசை மோடி தான் இயக்கி வருகிறார். இதற்கு தமிழக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. ஆகவே இடைத்தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் என்றார்.