சிவகங்கை மாவட்டம், கல்லலில் உள்ள நர்கனி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மஞ்சு விரட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவையொட்டி, அம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கோயில் முன்புள்ள திடலில் மஞ்சு விரட்டு நடைபெற்றது. இதில், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து 150-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில், மாடுபிடி வீரர்கள் 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் கல்லல் அருகே உள்ள செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், கல்லல், சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்துகொண்டு மஞ்சு விரட்டை கண்டு ரசித்தனர்.