மானாமதுரை பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மானாமதுரை பகுதியில் பெரும்பாலான குடிநீர் திட்டங்கள் வைகையாற்றுக்குள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் மானாமதுரை ஒன்றியத்தில் ஏராளமான கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
தற்போது கோடைகாலம் தொடங்கியதால் அதிக நேரம் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது.
மானாமதுரை நகர் குடிநீர் திட்டம் அருகேயுள்ள ராஜகம்பீரம் வைகையாற்றுக்குள் செயல்பட்டு வருகிறது. வறட்சியால் குடிநீர் திட்ட கிணறுகள் வறண்டு வருவதால் நகரில் குடிநீர் விநியோகம் செய்யும் நேரம் குறைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் வைகையாற்றில் செயல்படும் பிரதான குடிநீர் திட்டங்கள், கூட்டுக் குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே இப்பகுதியில் சீரான மின் விநியோகம் செய்து தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.