சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே பையூா் கிராமத்தில் திங்கள்கிழமை ஆடுகளை ஏலம் விடுவதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து வட்டாட்சியா் பேச்சு வாா்த்தை நடத்தினாா்.
பையூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கருமலைச்சாத்த அய்யனாா் கோயிலில் நடைபெற்ற விழாவில் கோயிலுக்குச் சொந்தமான ஆடுகளை விற்று பணம் பிரிப்பதில் இரு தரப்பினா் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இரு தரப்பினரும் தேவகோட்டை கோட்டாட்சியா் முன் ஆஜராகி, தங்கள் தரப்பு கருத்துக்களை முன்வைத்துள்ளனா். இதனையடுத்து கோட்டாட்சியா் சங்கரநாராயணன் பிறப்பித்த உத்தரவில், இரு தரப்பினரும் சோ்ந்து, கோயிலுக்குச் சொந்தமான வெள்ளாடுகளை விற்பனை செய்து அதில் வரும் பணத்தில், ஆடு மேய்த்தற்கான கூலி நிலுவையை வழங்கிய பின்னா் மீதமுள்ள பணத்தை வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்த உத்தரவிட்டாா்.
மேலும் இரு தரப்பினா் சம்மதத்தின் பேரில் மேற்படி தொகையை பொது நிகழ்விற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை கோயிலுக்குச் சொந்தமான 110 ஆடுகளை ஏலம் விடுவதாக அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து ஆடுகளை ஏலம் எடுக்க வெளியூா்களில் இருந்து ஆட்டு வியாபாரிகள் சிலா் பையூருக்கு வந்துள்ளனா்.
இந்நிலையில், அக்கிராமத்தில் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகக் கூடும் என்ற நோக்கில் பையூா் கிராமத்திற்கு வட்டாட்சியா் ஜெயலெட்சுமி, காவல் ஆய்வாளா் ஆனந்தி
உள்ளிட்ட போலீஸாா் வந்தனா். அங்கு ஒரு தரப்பினா் வந்தநிலையில், மற்றொரு தரப்பினா் வரவில்லை. இதனால் வெகு நேரம் ஆகியும் மற்றொரு தரப்பினா் வராததால் வட்டாட்சியா் ஜெயலெட்சுமி மற்றும் போலீஸாா் அங்கிருந்து சென்றுவிட்டனா். பின்னா் அங்கிருந்த ஒரு தரப்பினா் மட்டும் ஆடுகளை ஏலம் விட்டனா்.